ரஷியா – உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை; ரத்து செய்த அமெரிக்கா?

ரஷியா – உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருந்த நிலையில், கடைசி தருணத்தில் ரத்து செய்யப்பட்டது.
ரஷியா – உக்ரைன் இடையிலான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை, மாஸ்கோவில் இன்று நடைபெறவிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்பட பிரிட்டன், பிரான்ஸ், உக்ரைன் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், திட்டமிடல் பிரச்னை காரணமாக பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கடைசி நிமிடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் அமைச்சகம் கூறியது.
இதையடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டதுடன், லண்டனில் நடக்கவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும், அதற்கு மாறாக அவர்களுக்கு அடுத்தநிலை அதிகாரிகளே கலந்து கொள்வார்கள் என்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
முன்னதாக, ரஷியா – உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமைதி தென்படாவிட்டால், பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவின் திடீர் ரத்து முடிவு, சந்தேகங்களை எழுப்புவதாக உலக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனிடையே, பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இன்று காலை கிழக்கு உக்ரைனின் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பேருந்து ஒன்று வெடித்துச் சிதறியதில், உள்ளிருந்த 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் பலியாகினர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.