;
Athirady Tamil News

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

0

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகி ஷீத்தல்(24). இவரைக் கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது சகோதரி அளித்த புகாரிபேரில் போலீஸார் தேட ஆரம்பித்தனர்.

இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில்,

கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி விசாரணை நடத்தினோம். இதில் காணாமல்போன ஷீத்தலின் உடல் எனத் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் ஷீத்தல் மாடலிங் செய்வதற்கு முன்பு ஒரு உணவகத்தில் பணியாற்றியது தெரிய வந்தது. அந்த உணவகத்திற்குச் சென்ற போலீஸார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அதில் ஷீத்தல், ஆண் நண்பர் ஒருவருடன் காரில் ஏறுவதும் தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையில், அவரின் ஆண் நண்பர் சுனில் என தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலையான ஷீத்தல் சுனிலுக்குச் சொந்தமான உணவகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அப்போது இருவரும் நெருக்கி பழகி வந்துள்ளனர். ஆனால் சுனில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்பதை அறிந்த பிறகு ஷீத்தல் அவரிடமிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள கிராமத்திற்கு வந்திருந்த ஷீத்தலை சுனில் சந்தித்துள்ளார். அவரை தன்னுடன் உணவகத்திற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இருவரும் காரில் ஏறிய நிலையில் ஷீத்தலுக்கு வேறொரு நபருடன் தொடர் இருப்பதால் தன்னுடனான உறவை துண்டித்ததாக சுனிலுக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது.

இதனிடையே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் ஷீத்தல் தனது சகோதரிக்கு விடியோ அழைப்பை மேற்கொண்டு சுனில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார். எனினும் சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரிடமிருந்த எந்த தகவலும் இல்லை.

அதன்பின்னர், ஜூன் 15ல் பானிபட்டில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் ஒருநாள் கழித்து கார்கோடாவில் உள்ள ஒரு கால்வாயில் ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் ஷீத்தல் தன்னிடமிருந்து விலகியதாலும், வேறொரு நபருடன் தொடர்புள்ளதாகச் சந்தேகத்தின் அடிப்படையிலும் ஷீத்தலை கொன்றதாக சுனில் ஒப்புக்கொண்டார்.

சிம்மி என்ற பெயரைக் கொண்ட ஷீத்தல், 9 ஆண்டுகளுக்கு முன்பு பானிபட்டைச் சேர்ந்த சந்தீப் குமாரை மணந்தார், மாடலிங் துறையில் தொடர விரும்புவதால் அடிக்கடி ஏற்பட்ட தகராறுகள் காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் கூலிப்படையை ஏவி கணவரை மனைவி கொன்ற நிலையில், ஹரியாணா மாடல் அழகி கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.