;
Athirady Tamil News

ஒரே இரவில் உக்ரைனின் 61 ட்ரோன்களை வீழ்த்திய ரஷியா!

0

ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின் 61 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் பல்வேறு முக்கிய நகரங்களின் வானில் உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா ட்ரோன்கள் நேற்று (ஜூன் 19) இரவு 8 மணி முதல் (ரஷிய நேரப்படி) தாக்குதல் நடத்தும் நோக்கோடு சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஷிய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் இன்று (ஜூன் 20) காலை 7 மணி வரை உக்ரைனின் 61 ஆளில்லா ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரியோ மாகாணத்தில் – 22 ட்ரோன்களும், குர்ஸ்க் – 14, பெல்கோரொட் – 7, வொரோனெஸ் – 5, வோல்கோகிராட், துலா, ரொஸ்டோவ் மற்றும் பிரயன்ஸ்க் ஆகிய மாகாணங்களில் தலா 3 ட்ரோன்களும், மாஸ்கோவ் மீது ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளில், எந்தவொரு உயிர் அல்லது பொருள் சேதங்கள் ஏற்படவில்லை என அம்மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஷியா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், உக்ரைன் எப்போது வெளிநாடுகளிடம் இருந்து ராணுவ உதவிகள் பெறுவதை நிறுத்துகின்றதோ அப்போதுதான் போர்நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ரஷியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.