;
Athirady Tamil News

போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

0

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்தப் போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், இந்தப் போர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தெற்கு இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெஹ்ரானின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருமென அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் மாறாக இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுப்போம் என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.