யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை: நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிர்ப்பு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உட்படுவதை முற்றாக எதிர்த்து இன்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கட்டட அனுமதியினை வழங்க கூடாது எனவும், அதற்குரிய அனுமதிகளை பிரதேச சபையே வழங்கும் எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று சபையின் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திராகராசா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் பிரதேச சபையின் அனுமதியினை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதேச சபை தலமைக் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரர் தர்மலிங்கம் மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் நினைவுதினங்களை பிரதேசசபையே நடாத்தும் எனவும் வேறு எந்த அமைப்புக்களும் அதனை நடத்த முடியாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு மக்களின் நன்மை கருதி வியாபார அனுமதிப்பத்திரந்தை ஒரு நாள் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


