;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஷெல் தாக்குதல்! 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயம்!

0

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நடைபெற்ற மோர்ட்டார் ஷெல் தாக்குதலில், 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குர்ராம் மாவட்டத்திலுள்ள காச்சி கமார் கிராமத்திலுள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (ஜூன் 28) ஷெல் குண்டு விழுந்து வெடித்துள்ளது.

இந்தத் தாக்குதலில், அந்த வீட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி பலத்த சேதமடைந்து இடிந்த நிலையில், 5 முதல் 11 வயதுடைய 5 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சேதமடைந்த வீட்டிலிருந்து படுகாயமடைந்தவர்களை மீட்ட கிராமவாசிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர்.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற பகுதி ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ளது. இருப்பினும், அந்த ஷெல் குண்டு அடையாளம், கண்டுபிடிக்கப்படாத இடத்திலிருந்து ஏவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வரும் சூழலில், இந்தத் தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.