;
Athirady Tamil News

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

0

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்காவில், சுமார் 29 நாடுகளில் குரங்கு அம்மையின் பரவல் உள்ளது உறுதியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 1,91,559 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இத்துடன், சுமார் 1,999 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.

இருப்பினும், கடந்த மே மாதம் பதிவான பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், தற்போது குரங்கு அம்மையின் பரவல் 70 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 1,620 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், சென்ற வாரம் 491 பாதிப்புகள் மட்டுமே உறுதியாகியுள்ளன.

முன்னதாக, குரங்கு அம்மை தொற்றானது, குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி. நோயாளிகளையே அதிகம் பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப் போர்களினாலும், ஆட்சியாளர்களின் ஊழலினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்நாடுகளில் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், மருத்துவம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பது அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பரவலுக்கான அவசரநிலை நீக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், இந்த அவசரநிலை நீக்கப்படுவது, தொற்று பரவல் முடிவடைந்துவிட்டது என அர்த்தம் இல்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.