;
Athirady Tamil News

காப்பீட்டு தொகைக்காக புது மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது

0

காப்பீட்டு தொகைக்காக தனது புது மனைவியைக் கொன்று சாலை விபத்தில் உயிரிழந்ததுபோல நாடகமாடிய கணவரை ஜார்க்கண்ட் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக் பதாமா புறநகர் காவல்நிலைய அதிகாரி சஞ்சித்குமார் துபே கூறியதாவது:

பதாமா-இட்கோரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கி காயங்களுடன் மயங்கி கிடப்பதாக திங்கள்கிழமை கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், விபத்தில் சிக்கிய முகேஷ்குமார் மேத்தா (30) மற்றும் அவரின் மனைவி செவந்தி குமாரி (23) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். செவந்தி குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லேசான காயமடைந்திருந்த முகேஷ் குமாருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில், மனைவியின் இறுதிச் சடங்கின்போது முகேஷ் குமாரின் செயல்பாடுகள் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், முகேஷ் குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, விபத்துக் காப்பீடு தொகை ரூ. 30 லட்சம் கிடைக்கும் என்பதற்காக, வயிற்று வலி சிகிச்சைக்காக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது மனைவியை ஹெல்மட்டால் தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார்.

மேலும், தனக்குத் தானே சிறு காயங்களை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்தது. இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.