கலிஃபோர்னியாவில் பயங்கர விபத்தில் 3 பேர் பலி! இந்திய டிரக் ஓட்டுநர் கைது!
கலிஃபோர்னியாவில், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியாகக் காரணமாக இருந்ததாகக் கூறி இந்திய டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குள் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்த 21 வயது இந்தியாவைச் சேர்ந்த ஜஷன்ப்ரீத் சிங், ஒன்டாரியோவில் பயங்கர விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியாகக் காரணமாகக் இருந்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தும்போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ஓரிடத்தில், சாலையில் வாகனங்கள் நின்றிருக்க, அந்த வழியாக வேகமாக வந்த டிரக் வாகனங்கள் மீது இடித்துக்கொண்டே நிற்காமல் செல்கிறது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சுக்குநூறாகிறது. இதில் 3 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். அனைத்து வாகனங்கள் மீதும் மோதிவிட்டு செல்லும்வரை டிரக் பிரேக் பிடிக்கவில்லை என்றும், டிரக்கை ஓட்டிய போது, ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டிருக்கும் ஓட்டுநர், சட்டப்படி நாட்டுக்குள் நுழையவில்லை. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில், கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர்களுக்கு உரிமம் அளிப்பதில், அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விபத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங், அமெரிக்காவில் கனரக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதேப்போன்ற மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.