உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!
உக்ரைனின் கீவ் நகரத்தில், ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மீது ரஷியா, நேற்று முன்தினம் (நவ. 13) இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், ரஷிய ராணுவம் 430 ட்ரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷியாவின் இந்த பயங்கர தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், கர்ப்பிணி பெண் ஒருவர் உள்பட 35 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல், ஒடேசா மற்றும் கார்கிவ் மாகாணங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முழுவதுமாக மறுத்துள்ள ரஷிய அரசு, உக்ரைனின் ராணுவ மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது. இருப்பினும், கடந்த 3 வாரங்களில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு உக்ரைனின் மின்சக்தி அமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனால், உக்ரைனில் குளிர்காலத்தில் மக்கள் ஹீட்டர் போன்ற அடிப்படை மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாகக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.