களியாட்ட விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ; உரிமையாளர் உட்பட 6 பேர் கைது
கம்பஹா, சீதுவை பகுதியில் களியாட்ட விடுதி ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆறு பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதியின் முகாமையாளர், தொழிலதிபர் ஒருவர், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளருக்கு எதிராக முன்னதாக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.