;
Athirady Tamil News

பாகிஸ்தானில் குறிவைக்கப்படும் ரயில்கள்! மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்!

0

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ரயில் தண்டவாளத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானின் நசிராபாத் பகுதியில் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தின் மீது நவீன வெடிகுண்டுகள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று (ஜன. 7) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின்போது அங்கு எந்தவொரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதால் உயிர் சேதங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சேதமடைந்த ரயில் தண்டவாளத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, பலூசிஸ்தானை பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுடன் இணைக்கும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தண்டவாளங்களின் மீது நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல்களில், அப்பகுதியில் இயக்கப்படும் ரயில்கள் தடம்புரள்வதால் பயணிகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் சிறைப்பிடித்தனர். பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.