;
Athirady Tamil News

2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

0
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (26.01.2026) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் வைத்து குறித்த வீட்டுத் திட்ட பயனாளிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி தமது கோரிக்கை மனுவை கையளித்தார்கள்.
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீட்டுத் திட்ட பயனாளிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும், இதனால் வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், குடியிருந்த தற்காலிக வீடுகளை அகற்றியுள்ளதாகவும், கடன்பட்டும் வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவருவதாகவும் தமது பக்க நிலைமைகளை தெரிவித்தார்கள்.

இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் ,

இவ் விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்,2018 ஆம் ஆண்டு 1883 வீடுகளும், 2019 ஆம் ஆண்டு 1933 வீடுகளுமாக மொத்தமாக 3816 வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பகுதி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மிகுதி கொடுப்பனவுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை தொடர்பாக வீடமைப்பு நிர்மாணிப்பு  அமைச்சர் மற்றும் துறைசார் திணைக்களங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும், மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் ஆராயப்பட்டுள்ளது எனவும், உங்களது கோரிக்கைகள் தொடர்பில் தங்களால் கையளித்த கோரிக்கை மனுவினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு இத் திட்டங்களில் உள்ள 66 வீடுகளுக்கு தலா 10 இலட்சம் வீதம், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையினை கழித்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர்  க.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.