;
Athirady Tamil News

கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு  தண்டப்பணம் அறவீடு

0
video link-
https://fromsmash.com/lMU4VAm9oc-dt

கல்முனை மாநகரப் பகுதிகளில்  பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட   கட்டாக்காலி மாடுகள்   மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு  அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின்  பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு  அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏலவே பிடிபட்ட மாடுகள் மீண்டும் பொது இடங்களில் நடமாடுமாயின் அவை மீண்டும் கைப்பற்றப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுடமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பதுடன் வாகனப் போக்குவரத்துகளுக்கும் இடையூறாக அமைகின்ற அதேவேளை விபத்துகளும் நிகழ்கின்றன.

குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி காயமடைவதுடன் உயிராபத்தையும் எதிர்நோக்கி இருந்தனர்.அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து  அசுத்தப்படுத்தி வருவதும் அதனால் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி .இருந்தது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு  அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம் தண்டப் பணம் அறவிடும் நடவடிக்கை தீவிரப்படுத்த கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த காலங்களில் கட்டாக்காலிகளை  பிடிப்பதில் பொலிஸார் மாநகர சபையினருக்கும்  இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது.அவை யாவும் சீர் செய்யப்பட்டு  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தலைமையில் மாநகர சபையினருடன்  தற்போது  இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து வருவதுடன் மக்களும் பல்வேறு சிரமங்களுக்குள் உள்ளாகி வருகின்றனர் என்ற செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியாகி இருந்தன.

இந்த பிரச்சினை தொடர்பில் பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் சுட்டி காட்டியுள்ள போதிலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வியுடன் இப்பிரச்சினை தொடர் பிரச்சினையாக அதிகரித்திருந்தது.

கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் நாய்கள் உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்விற்கு அச்சுறுத்தல் விடுகின்ற ஒரு பேசு பொருளாக மாறி  இருந்தது.

இவ்வாறான பிரச்சினைக்கு  கல்முனை வர்த்தக சங்கம் கல்முனை பொதுச்சந்தை சங்கம் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள்  மாநகர சபை மற்றும் பொலிஸாரிடம் குறிப்பிட்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை  சுமத்துவதுடன் குறித்த பிரச்சினை தீர்ந்த பாடில்லை என மக்கள் அங்கலாய்த்தனர்.

இது குறித்து  கல்முனை மாநகர சபையினரிடம் கேட்டால் பொலிஸார் தமக்கு ஒத்துழைப்பு இல்லை என கூறுகின்றார்கள்.ஆனால் பொலிஸாரிடம் இவ்வாறு கேள்வி கேட்டால் மாநகர சபை இவ்விடயத்தில் நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு தருவதற்கு தயாராக உள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய தற்போது கட்டாக்காலி மாடுகள்   மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.