இஸ்ரேல் வான்வழி தாக்குதல் காசாவில் 29 பேர் பலி
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபர் முதல் நடந்த போர், கடந்தாண்டு அக்ரோபர் 10ல், அமெரிக்கா முன்மொழிந்த சமாதான திட்டத்தின் வாயிலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முழுமையான போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரிடையே பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று, காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.
காசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள், இரு பெண்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிசில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பற்றிய தீயில் சிக்கி மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
ரபா எல்லை திறப்பு மற்றும் சமாதான திட்டத்தின் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை மீறி, காசாவில் இருந்து ஏவுகணைகளை ஏவியதற்கு பதிலடியாகவே, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.