மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பு
மருதமுனை பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்-சுற்றுச்சூழல் சோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தை தொடர்ந்து கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை நீலாவணை பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்யவும் டெங்கு நோய்களின் பரவலை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கை மருதமுனை nபிய நீலாவணை பிரதேசத்தில் புதன்கிழமை(11) காலை 7 மணிமுதல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் விசேட அறிவுறுத்தலின் பேரில் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.ஐ.றிஸ்னீன் முத் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (9) மாலை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் தலைமையில் டெங்கு ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் போது பல துறை சார் உத்தியோகத்தர்களதும் பங்கேற்றலுடன் கருத்துப்பரிமாறல்கள் ஆளணி பய்களிப்பு டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.
கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி,கல்முனை தெற்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி சமூக நல விசேட வைத்தியர், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,நுளம்பு கட்டுப்பாட்டுக் கள உதவியாளர்கள் ,மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் , கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
டெங்கு நோய்களின் பரவலை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பெரிய நீலாவணை மருதமுனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன் வெற்றுக்காணிகள் வீடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் கட்டட இடிபாடுகள் ஆகியவற்றை தீவிரமாகச் சோதனை செய்யவுள்ளனர்.
இதன்போது நுளம்பு பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கி நின்ற கொள்கலன்கள் பயன்படுத்தப்படாத டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட உள்ளன.
சுற்றுச் சூழலை மிகவும் அசுத்தமாகவும் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலைக் வைத்திருப்பவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட உள்ளதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் டெங்கு நோயின் ஆபத்துக்கள் அதன் அறிகுறிகள் மற்றும் நோய்த் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
