கடுமையான அரசியல் மோதல் ; கொதித்தெழுந்த விஜய்
சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுமக்களிடம் கள ஆய்வில் (சர்வே) ஈடுபட்டபோது, திமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அனுமதியின்றி பிரவேசித்ததாக கூறி திமுகவினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு உருவானது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெரும் மோதலைத் தவிர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் 4 மாதக் கர்ப்பிணி உட்பட தவெக நிர்வாகிகள் இருவர் பலத்த காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், “கள ஆய்வில் ஈடுபட்ட நம் கழகத்தினர் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தவெகவின் செல்வாக்கைக் கண்டு பயந்து, ஜனநாயகத்தின் குரல்வளையை திமுக நெரிப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதற்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.