;
Athirady Tamil News

ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் தாக்குதல்! அணுக் கதிர்வீச்சு அபாயம்?

0

ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தைக் குறிவைத்து அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 1) தாக்குதல் நடத்தியதாக ஈரான் உறுதிபடுத்தியுள்ளது.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின.

ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை மதகுரு இல்ல வளாகம் ஆகியவையும் அடங்கும். அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

இதனிடையே, ஈரானின் எந்தவொரு அணு சக்தி உள்கட்டமைப்பிலும் இதுவரை தாக்குதல்கள் இல்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு முகமை தெரிவித்திருந்தபோதிலும், அதனை நிராகரித்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் முக்கிய அணு சக்தி வளாகமான ‘நடான்ஸ்’ மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு சக்தி முகமைக்கான (ஐ.ஏ.இ .ஏ.) ஈரானிய தூதர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மத்திய ஈரானில் அமைந்துள்ள ‘நடான்ஸ்’ அணு சக்தி வளாகம் அந்நாட்டின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் மையமாக விளங்குகிறது. இந்நிலையில், மேற்கண்ட தாக்குதல் நடவடிக்கைகளால் அணுக் கதிர்வீச்சு ஏற்படலாம் என்று ஐ.ஏ.இ .ஏ. தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ராசி கவலை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.