;
Athirady Tamil News

டைட்டானிக் காதல்! டிரம்ப் – எப்ஸ்டீனுக்கு சிலை வைத்து மர்ம நபர்கள் கிண்டல்!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோருக்கு டைட்டானிக் திரைப்பட காட்சி வடிவிலான சிலையை நிறுவி மர்ம நபர்கள் கிண்டலடித்துள்ளனர்.

அமெரிக்காவில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் எப்ஸ்டீனுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதிபர் டிரம்ப் மறுத்துள்ள நிலையில், அவர் உள்பட பல்வேறு பிரபலங்கள் எப்ஸ்டீனுடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவை “எப்ஸ்டீன் ஃபைல்ஸ்” என்ற பெயரில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில், டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெறும் காதல் காட்சியின் வடிவில், அதிபர் டிரம்ப் மற்றும் எப்ஸ்டீனை காதலர்களாகச் சித்திரித்து தற்காலிக சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

மரம் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு தங்கநிற சாயம் பூசப்பட்ட இந்தச் சிலையை சீக்ரெட் ஹேண்ட்ஷேக் எனும் மர்ம அமைப்பு நிறுவியுள்ளது.

இந்தச் சிலையில், இடம்பெற்ற பதாகையில் கூறப்பட்டதாவது:

“ஜாக் மற்றும் ரோஸ் (டைட்டானிக் காதலர்கள்) இடையிலான சோகமான காதல் கதை ஆடம்பரமான பயணம், ஆரவாரமான விருந்துகள் மற்றும் ரகசிய நிர்வாண ஓவியங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது.

இந்த நினைவுச்சின்னம் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு இடையிலான உறவை நினைவுகூர்கிறது. அவர்களது நட்பும் ஆடம்பரமான பயணம், ஆரவாரமான விருந்துகள் மற்றும் ரகசிய நிர்வாண ஓவியங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அதிபர் டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான உறவை பகிரங்கப்படுத்தும் நோக்கில் சீக்ரெட் ஹேண்ட்ஷேக் அமைப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு “பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஃபார்எவர்” எனும் பெயரில் அவர்களது சிலையை நிறுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.