;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

0

இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தினால் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.

பிலிப்பின்ஸ் கடற்கரையிலிருந்து 580 கி.மீ. தொலைவிலும், மலேசியாவின் சபா பகுதியிலிருந்து 1,000 கி.மீ. தொலைவிலும் நடுகடலில் 35 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.

இதைத் தொடா்ந்து, கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் நிலைமை சீரானதைத் தொடா்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

உயிரிழப்பு மற்றும் பாதிப்பு: பிதுங், டொ்னேட் நகரங்களில் 10 முதல் 20 விநாடிகள் வரை நிலம் கடுமையாகக் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனா்.

மனாடோ நகரில் உள்ள விளையாட்டு ஆணையத்தின் கட்டடம் ஒன்று பகுதியளவு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவா் உயிரிழந்ததாா்.

பல இடங்களில் வீடுகளும், ஒரு தேவாலயமும் சேதமடைந்தன. சேதமடைந்த கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என அந்நாட்டு பேரிடா் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.

தொடா் அதிா்வுகள்: முதன்மை நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, அடுத்தடுத்து சுமாா் 50 முறை நில அதிா்வுகள் ஏற்பட்டன. இதில் அதிகபட்சமாக ஒரு நில அதிா்வு ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின்போது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இருளில் தவித்தனா்.

சுனாமி அலைகள்: நிலநடுக்கத்தின் எதிரொலியாக வடக்கு சுலவேசி உள்ளிட்ட 5 இடங்களில் கடல் மட்டம் உயா்ந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வடக்கு மினாஹாசாவில் 0.75 மீட்டா் உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

தொடக்கத்தில் அலைகள் 3 மீட்டா் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனா். பிலிப்பின்ஸ், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்த சில மணி நேரத்தில் சுனாமி ஆபத்து நீங்கியதாக தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து பதற்றம் தணிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.