உயிர்த்த ஞாயிறு ; நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பு
இன்று நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் உயிர்ப்புப் பெருவிழா (ஈஸ்டர் ஞாயிறு) கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புப் படையினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய விசேட அறிவுறுத்தல்களுக்கு அமைய, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரினால் விசேட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மக்கள் அதிகளவில் கூடும் தேவாலயங்களை அடையாளம் கண்டு அங்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நாடு தழுவிய ரீதியில் தேவாலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள முக்கிய தேவாலயங்களில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் வார இறுதி மற்றும் தாக்குதல்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நிலவும் உணர்வுப்பூர்வமான சூழலைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.