யாழ்ப்பாணத்துக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தித்வா’ சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தன. ஆரம்பத்தில் தற்காலிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கொழும்பு கோட்டை முதல் யாழ்ப்பாணத்திற்கிடையில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.
வடக்கு ரயில் பாதை வழமைக்குத் திரும்பவுள்ளது
பின்னர், குறித்த 14 இடங்களிலும் நிரந்தர புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் 5 மில்லியன் டொலர் நிதி உதவியின் கீழ் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் இரண்டு மாத காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட 14 இடங்களும் சீரமைக்கப்பட்டதுடன், பணிகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 9ஆம் திகதி முதல் வடக்கு ரயில் பாதை வழமைக்குத் திரும்பவுள்ளது.