;
Athirady Tamil News

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

0

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பலில் இருந்து 30 பயணிகள் மீட்கப்பட்டனர்.

ப்ளூ லகூன் குரூஸஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் எம்வி பிஜி பிரின்சஸ் என்ற கப்பல், கடந்த சனிக்கிழமை மொனூரிகி தீவுக்கு அருகே தரைதட்டியது. கப்பல் நங்கூரமிட்டபோது வானிலை அமைதியாகவே இருந்தாகவும் பிறகு திடீரென ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பலின் நங்கூரம் இழுக்கப்பட்டு, அருகிலுள்ள பவளப்பாறையில் மோதி கப்பல் தரைதட்டியதாகத் தெரிகிறது என்று ப்ளூ லகூன் குரூஸஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கப்பலின் அருகே படகு கொண்டு வரப்பட்டு, 30 பயணிகளும் அவர்களது உடமைகளுடன் பத்திரமாக இறக்கப்பட்டனர் என்றும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுளளது. மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் டெனாராவ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு, கப்பலில் இருந்த எரிபொருள் மற்றும் எண்ணெய் வகைகள் திங்கள்கிழமைக்குள் அகற்றப்பட்டதாக சுற்றுலா நிறுவனம் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த மீட்புப் பணி நிபுணர் ஞாயிற்றுக்கிழமை முதல் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல் தரைதட்டிய தீவுதான் 2000-ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியான காஸ்ட் அவே திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.