ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது: ஈரான்
ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. இதனை, மீண்டும் திறக்கும் முன்னர் அதன் செயல்பாடு தொடர்பான புதிய நிபந்தனைகளை அமல்படுத்த ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில், ”பாரசீக வளைகுடாவின் புதிய ஒழுங்குமுறைக்காக ஈரானிய அதிகாரிகள் அறிவித்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய தயாரிப்புகளை ஈரான் கடற்படை நிறைவு செய்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், ”ஹோர்முஸ் நீரிணை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு, போருக்கு முந்தைய பழைய நிலைக்குத் திரும்பாது” என்றும் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல்கள நடத்தி ஈரானை நரகத்திற்கு அனுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில் இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் தற்போது ஹோர்முஸ் நீரிணை வழியே சில நாடுகளின் கப்பல் போக்குவரத்தை மட்டுமே அனுமதித்துள்ளது.
போர் காரணமாக மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுடன் இணைந்து ஓமன் பேச்சுவார்த்தை நடத்தியது. சமீபத்திய பேச்சுவார்த்தையில், ஈரான் சட்ட வல்லுநர்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணமும் வரியும் விதிக்கவேண்டும் என முன்மொழிந்துள்ளனர்.