12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
“ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என்று 35 வயதான பெட்ரியா ஆடம் என்ற அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஹிவோட் ஃபானா சிறப்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
“என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் பிரார்த்தனைகள் நிறைவேறும் வரை மன அழுத்தத்திலும் வேதனையிலும் இருந்தேன்,” என்று பெட்ரியா கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது நூர் அப்துலாஹி, தாயும் குழந்தைகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளின் எடை 1.3 முதல் 1.4 கிலோ வரை இருப்பதாகவும் கூறினார்.
ஒரு கிலோவுக்கும் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் ஆரோக்கியமாக வளர வாய்ப்பும் அதிகம் என்று அவர் கூறினார்.
மேலும், பெட்ரியா இயற்கையாகவே கர்ப்பம் அடைந்ததாகவும், செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஎஃப் சிகிச்சை பயன்படுத்தப்படவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார். அந்த மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.
ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை ஐவிஎஃப் சிகிச்சை வழங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.