ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு By Editor-A Last updated May 20, 2026 0 Share ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சக வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘உலக நாடுகள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ‘பொது உரிம எண்.134பி’-இன் கீழான தடை விலக்கு மே 16-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அது மே 18-ஆம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் ‘பொது உரிம எண்.134சி’-ஆக மாற்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்பாக கப்பலில் ஏற்றப்பட்டு பயணத்துக்காக கடலில் காத்திருக்கும் ரஷிய கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள உலக நாடுகளுக்கு மூன்றாவது முறையாக அமெரிக்கா பொருளாதார தடை விலக்கை அளித்துள்ளது. முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் இந்த தடை விலக்கை முதன் முறையாக அமெரிக்கா அளித்தது. இது கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டுப்பு செய்தது. உக்ரைன் மீது ரஷியா தொடா் தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் உள்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதுபோல மேலும் பல நாடுகள் மீது வரிவிதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்தது. இதனிடையே, அணுஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்த ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, அதற்குப் பதிலடியாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டு, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில், சமையல் எரிவாயு விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, விலையும் உயா்த்தப்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பும் குறைந்த நாள்களுக்கே நிலைமையை சமாளிக்க உதவும் என்ற நிலை உருவானது. இந்தச் சூழலில், ஈரான் மீதான போரால் நாடுகள் சந்தித்துவரும் தாக்கங்களை சற்று தணிக்கும் வகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு அமெரிக்கா தொடா்ந்து விலக்கு அளித்து வருகிறது. Download Premium WordPress Themes FreeDownload WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themesudemy course download free 0 Share