வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி தகவல்!! (படங்கள்)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்காக அங்குள்ள பெண்கள் சிலர் பாலியல் தொழிலுக்கு சென்றுள்ளது உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடல் சூழ்ந்த அழகிய தீவு தேசமான இலங்கை மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இன்று அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அன்னிய செலவாணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. பெட்ரோல், டீசல் உள்பட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. இதனால், மக்கள் வெகுண்டெழுந்தனர்.
பற்றி எரிந்த இலங்கை
தங்களின் இந்த நிலைமைக்கு ஆட்சி அதிகாரத்தை தன்னிடம் வைத்திருந்த ராஜபக்சே சகோதர்களே காரணம் என நினைத்து அவர்களுக்கு எதிராக கடும் போரட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கை பற்றி எரிந்தது. மக்களின் போராட்டத்துக்கு அஞ்சி முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால், அதிபர் பதவியில் இருந்து முதலில் விலக மறுத்து அடம் பிடித்த கோத்தபய ராஜபக்சே, மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்ததால், வேறு வழியின்றி தப்பி ஓட்டம் பிடித்தார். சிங்கப்பூரில் பதுங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரம்சிங்கே பதவி ஏற்றுள்ளார்.
அவல நிலை
எனினும், இலங்கையில் நிலைமை இன்னும் மாறியபாடில்லை. அண்டை நாடான இந்தியா பல உதவிகளை செய்தாலும் இலங்கைக்கு அது இன்னும் போதவில்லை. இதனால், வேலை இல்லா திண்டாட்ட்டம் அதிகரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் பல தொழில்களும் முடங்கியிருக்கிறன்றன. குறிப்பாக இதில் மிகக்கடுமையாக ஜவுளி துறையும் முடங்கியுள்ளது. அந்த துறையில் வேலை பார்த்த பெண்கள் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதனால், தங்களின் குடும்ப செலவுக்காக, பெண்கள் விபசாரத்தில் ஈடுபடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது
இலங்கையின் கொழும்பு பண்டராநயகே சர்வதேச விமான நிலையம் உள்பட அங்குள்ள தொழில் பகுதிகளை சுற்றித்தான் பெண்கள் விபாசாரத்தில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. போலீசாரின் ஒப்புதலோடும் இது நடக்கிறது எனவும் சொல்லப்படுவதுதான் அவலத்தின் உச்சம். இது குறித்து அங்குள்ள பெண் ஒருவர் கூறுகையில், ”நாட்டில் தற்போது நிலவும் இந்த மோசமான நிலைமையால் நாங்கள் வேலை இழந்து விட்டோம். தற்போது பாலியல் தொழிலில் மட்டுமே வருமானம் அதிகமாக கிடைக்கிறது. எங்களின் மாதம் சம்பளமாக ரூ 28 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை முன்பு கிடைத்தது. ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபட்டால் ஒருநாளைக்கு மட்டும் ரூ. 15 ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது. நான் சொல்வதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மை நிலவரம்” என்றார்.
அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு
அந்த பெண் கூறிய பதில், உலக நாட்டு மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலான காலக்கட்டத்தில் 30 சதவீதம் உயர்ந்து இருப்பதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, மருந்து உணவு பொருட்களுக்காக கடைக்காரர்களுடன் கட்டாயம் ஆக உறவு கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.