வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல்
இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை மாலை (05.02.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
‘யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோன்று தையிட்டி திஸ்ஸவிகாரை சட்டவிரோதக் கட்டடம் எனவும் விகாரைக்கு உரியதான காணியை மாற்றுக் காணியாக வழங்கினாலும் அது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர். மாற்றுக்காணியின் உறுதியில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர்கள், தமது காணிகளை விடுவித்துத்தரவேண்டும் என்று கோரினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர், காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மாறாக நான் நடந்து கொள்ளமாட்டேன். காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை எனக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் இரணைதீவில் கடற்படையினர் இப்போதும் பாஸ் நடைமுறையைப் பேணுகின்றனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும் காணி விடுவிப்பின் அவசியத்தை முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
மேலும் யாழ். மாவட்டத்தில் காணியற்ற 114 குடும்பங்கள் மருதங்கேணியில் குடியமர்வதற்கு இணக்கம் வெளியிட்டபோதும் அவர்களுக்கு காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பில் நிலவும் சிக்கல் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அவை தொடர்பில் கவனமெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர் எனத் தெரிவித்ததுடன் வவுனியா மாவட்டத்தில் விரைவில் நடமாடும் சேவை நடத்தி தீர்க்கக் கூடிய காணிப் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதியினது நிலைப்பாடு எனவும் அந்த நிலைப்பாட்டையே நானும் வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டச் செயலர்களாக 4 மாவட்டங்களில் பதவி வகித்தவன் என்ற அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் தொடர்பான விவரங்கள் தெரியும் என்றும் அதனடிப்படையில் இது தொடர்பில் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பினருடன் பேச்சு நடத்தி வருவதாகவும் இதன்போது தெரிவித்தார்.



