;
Athirady Tamil News

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

0

இஸ்ரேலில் இருந்து 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படை இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருதரப்பும் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்து வருகின்றன.

இதில், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒரு இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடலுக்கு இணையாக, இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்து வருகின்றது.

இந்த நிலையில், பிணைக் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்டு பலியான இஸ்ரேலிய வீரர் ஒருவரின் உடலை நேற்று (நவ. 4) ஹமாஸ் படை ஒப்படைத்தது. இதனால், காஸா அதிகாரிகளிடம் தங்களது கட்டுப்பாட்டில் பலியான 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

இதன்மூலம், இஸ்ரேல் ஒப்படைத்த பாலஸ்தீனர் உடல்களின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளதாக கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் படையினர் இதுவரை 21 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வந்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் ஏராளாமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 68,800-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களை பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இஸ்ரேல் அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.