3 நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானியா திட்டம்
மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா தடை விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், நாட்டின் புகலிட மற்றும் குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்க தயாராக உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விசா தடை விதிக்கப்படவுள்ளது.
அந்த நாடுகள் தங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் குற்றவாளிகளை திரும்பப்பெறுவதில் ஒத்துழைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
“நங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை திரும்பப்பெற மறுக்கும் நாடுகளுக்கு விசா வழங்கும் சலுகை இனி கிடையாது” என அவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய திட்டங்கள், டென்மார்க் பின்பற்றும் கடுமையான புகலிட கொள்கையை ஒத்திருக்கிறது.
இதன்மூலம், போர், கலகம், அரசியல் சூழ்நிலை காரணமாக புகலிடம் கோரும் நபர்களுக்கு பிரித்தானியா இனி தற்காலிக பாதுகாப்பு மட்டுமே வழங்கும்.
இந்த மாற்றங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரித்தானியாவின் புலம்பெயர்வு சட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் என கருதப்படுகிறது. மஹ்மூத், நவம்பர் 17-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவுள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் Kristi Noem முன்மொழிந்த திட்டதிரிலிருந்து ஈர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சுற்றுலா, வணிகம் மற்றும் VIP பயணங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விசாக்களும் அந்த மூன்று நாடுகளின் குடிமக்களுக்கு தடை செய்யப்படவுள்ளது.