தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கான ஆங்கில ஆய்வு மாநாடு
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினரால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியர் மாநாடு – 2025 எதிர்வரும் 31ஆம் திகதி, புதன்கிழமை காலை 8.00 மணி முதல் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் சி. கமலராஜன் மற்றும் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பிரிவின் இயக்குநரும், பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பி. என். சுதர்சன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதன்மை உரையாளராக யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் கலந்து கொள்ளவுள்ளார்.
இம் மாநாட்டில், ஆங்கில மொழி கற்பித்தலில் இலக்கியத்தின் பங்கு, ஏ2 மொழி கற்பித்தலில் டிஜிட்டல் கருவிகள், கலப்பு கற்றல் முறை, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, மாணவர் ஈடுபாடு மற்றும் ஊக்குவிப்பு போன்ற சமகால விடயங்களில் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.
ஆங்கில ஆசிரியர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இம் மாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
