மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப்
மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம்
மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமையத்தின் செயற்பாட்டாளர்களான பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் மற்றும் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையில்
மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.இதைப் பெறுவது எமது தார்மீக உரிமையாகும். எங்களிடம் நிர்வாக ஆளணிகள் உள்ளன.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். நகரசபை கிடைப்பதன் ஊடாக இன்னும் அதிக அபிவிருத்திகளை மேம்படுத்த முடியும்.மருதமுனை பிரதேசத்திற்குத் தனியான நகர சபை அமைப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று எமது மக்கள் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.சாய்ந்தமருது நகர சபை அம்மக்களுக்கு கிடைத்தது போன்று எமக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.அதே போன்று சாய்ந்தமருது நகர சபை வழங்கப்பட்ட விடயமானது அப்பகுதி மக்களின் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றி என்று நாம் கூற வேண்டும்.
எனவே தான் விரைவில் இவ்விடயம் குறித்து எதிர்காலத்தில் அரசாங்க அமைச்சு,அதிகாரிகள் உட்பட ஆளுநரையும் சந்தித்து பேச உள்ளதாக அவர் தனது கருத்தில் குறிப்பிட்டார்.
