;
Athirady Tamil News

1960 இன் அந்நியச் செலாவணி நெருக்கடி

0

கடந்த 1960இன் இறுதியில், கட்டற்ற இறக்குமதியென்பது முற்றிலும் சாத்தியமற்றதாகி விட்டது. அதிலும், ஒருபடி மேலாக, அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதே சவாலானதாகியது.

சுதந்திரமடைந்தது முதல் அதிகளவான தொடர் இறக்குமதிகள் அந்நியச் செலாவணியைக் கரையந் செய்து விட்டன. 1960களில் அந்நியச் செலாவணியின் கையிருப்பு கிட்டத்தட்ட இல்லாததாகவே மாறி விட்டது.

இந்த நிலையிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தது. இதனால் பற்றாக்குறையைச் சமாளிப்பது பாரிய சவாலானது. அந்நிய கடன்கள் பெறப்பட்டாலும் அவை இடைவெளியைக் குறைக்கப் போதுமானதாக இல்லை.

இதனால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
இந்தக் கடுமையான நடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டியிருந்தது. ஐம்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுகள் மீது நேரடி மற்றும் மறைமுகக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி,

ஏற்றுமதி-இறக்குமதி நிலைத் தன்மைக்காக (அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தவிர்க்க) போராடி வந்த அரசாங்கம், இப்போது அனைத்து வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளையும் விரிவான நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1957/58 பட்ஜெட்டில் தொடங்கி, இறக்குமதி வரிக் கொள்கையில் முக்கியத்துவம் படிப்படியாக வருவாயை அதிகரிப்பதில் இருந்து விலகி, புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, பொருளாதாரத்தின் வெளிப்புற ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

1950களின் பிற்பகுதி முழுவதும், வரி விகிதங்களில் ஏற்பட்ட அதிகரிப்புகள், வெளிநாட்டுக் கொடுப்பனவுகளின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அதிகரித்து வரும் கடுமையான மாற்றுக் கட்டுப்பாட்டுடன் இணைந்து பயன்படுத்தப்பட்டன.

1957/58 பட்ஜெட் மூலதன உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைத்தது. இதன்மூலம் உள்நாட்டுத் தொழிற்றுறையை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் பாடுபட்டது. அதேநேரத்தில், சில நுகர்வோர் ஆடம்பரப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இதன்மூலம் ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த அரசாங்கம் முனைந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டும் நடக்கவில்லை. உள்நாட்டுக் கைத்தொழில்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை, அதேவேளை, ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியும் குறையவில்லை.

பொருளாதாரத்தின் வெளிப்புற சமநிலையை மேம்படுத்த இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் 1960 பட்ஜெட் இறக்குமதி வரிகளை மீண்டும் அதிகரித்தது.

கார்கள், பெட்ரோல், மதுபானம் மற்றும் புகையிலை ஆகியவை அதிகரித்த வரிவிதிப்புக்கான முக்கிய இலக்குகளாக இருந்தன. ஆறு ஆண்டுகளாகக் கிட்டத்தட்டத் தொடர்ந்து உயர்ந்து வந்த மொத்த பொருட்களின் இறக்குமதிகள் இறுதியாகக் கட்டுக்குள் வந்தன.
இருப்பினும், ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சி ஏற்படவில்லை. மீண்டும் ஒரு பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் பொருளாதாரச் சரிவு தடையின்றி தொடர்ந்தது.1950களின் பிற்பகுதியில் இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் கொள்கை, அதன் முக்கிய இலக்கை அடைவதில் வெற்றிபெறவில்லை.

இது முக்கியமானதும் கவனிப்புக்கு உள்ளாக வேண்டிய ஒன்றாகும். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியின் ஆணி வேர்களை விளங்கிக் கொள்ள இக்காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை வகுப்பின் தோல்விகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவை வெறுமனே கொள்கை வகுப்பின் தோல்விகள் மட்டுமல்ல. அவை இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூகச் சிந்தனையின் உள்ளார்ந்த வெளிப்பாட்டின் விளைவாக ஏற்பட்ட தோல்விகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1960களின் முற்பகுதியில் விதிக்கப்பட்ட நேரடிக் கட்டுப்பாடுகள் ஒரு விரிவான அமைப்பை நாடுவதற்குப் பதிலாக, இறக்குமதி வரிவிதிப்பு மீதான முதன்மை அல்லது ஒருவேளை ஒரே ஒரு நம்பிக்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையை நோக்கிய நிலைத்தன்மையைக் கொண்டுவர முயன்றது.

நேரடிக் கட்டுப்பாடுகள் மூலம் அடையக்கூடிய எதையும் போதுமான அளவு வரிகள் மற்றும் மானியங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் செய்ய முடியும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கையற்று இருந்ததா என்ற வினா முக்கியமானது.

இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் விரும்பியது போல, ஏற்றுமதி எதிர்பார்த்தது போல, அதிகரித்திருந்தால் அந்நியச் செலாவணிச் சமநிலையை மீட்டெடுக்க முடிந்திருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், அந்த நேரத்தில் நெருக்கடி முழுமையாக இல்லையாயினும் தற்காலிகமாகவேனும் தீர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், ஏற்றுமதிக்கும் இறக்குமதியைக் குறைப்பதற்காகவும் அரசாங்கம் பெருந்தொகையான அரச வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கிய தொழிற்றுறைகள் வெற்றியளிக்கவில்லை.

சில விதிவிலக்காக மிகவும் வினைத்திறனுடனும் இலாபத்துடனும் இயங்கின. ஆனால், அவற்றை விரிவாக்கி அதன் உச்சப் பயனைப் பெறுவதற்கான செயன்முறைகளில் அரசாங்கம் இறங்கவில்லை. இந்த விதிவிலக்குகள் பெரும்பாலும் நாட்டின் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்றுறைகளாக இருந்தன.

இவற்றில் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இராசாயச் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை என்பன குறிப்பிடத்தக்கன. இவை ஏன் வெற்றியளித்தன என்பது விரிவான ஆய்வை வேண்டுவது. ஆனால், இது குறித்த விரிவான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

இறக்குமதி வரிக் கொள்கை அதன் ஏற்றுமதி, இறக்குமதி சமநிலை இலக்கை அடையத் தவறியதற்கான ஒரு அளவுகோல் வருவாயில் அது அனுபவித்த ஒப்பீட்டு வெற்றியாகும். இறக்குமதிகளைத் தடுத்து நிறுத்தும் வரிகளால் வருவாயைச் சேகரிக்க முடியாது,

மேலும் இறக்குமதி வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு ரூ. 400,000,000க்கும் அதிகமாக உயர்ந்தது. இது அதிக வரிகள் இருந்தபோதிலும் பொருட்கள் இன்னும் ஏராளமாக உள்ளே வந்தன என்பதைக் காட்டுகிறது.

இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி இயல்பானது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இறக்குமதி வரியால் கிடைக்கும் வரி அதிகமாக இருந்தது. இங்கு மூன்று விடயங்களைக் கவனிக்க வேண்டும்.

முதலாவது, தடைகளையும் மீறி சட்டவிரோதமாகப் பொருட்கள் உள்வந்தன. இரண்டாவது, அரசியல் அனுசரணையுடன் பொருட்களை சட்டங்களை மீறிய வகையில் இறக்குமதி செய்யப்பட அனுமதிக்கப்பட்டன.

மூன்றாவது பல வர்த்தகர்கள் கடுமையான தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு போதுமான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்து பதுக்கினர்.இந்த நேரத்தில், இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களின் அடிப்படைத் தோல்வி என்னவென்றால், அவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி சமநிலைப் பாதுகாப்பை ஒரு சுழற்சிப் பிரச்சினையாகக் கருதினர்.

இது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று நம்பலாம். பொருளாதாரத்திற்குள் வலுவான பொருளாதார, அரசியல் மற்றும் மக்கள்தொகை சக்திகள் தொடர்ச்சியான பற்றாக்குறைகளுக்கு வேலை செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்,

இதனால் இறக்குமதிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் மிகவும் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். பின்னோக்கிப் பார்த்தால், மற்றொரு ஏற்றுமதி ஏற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட, அது நெருக்கடியைத் தள்ளிப்போட மட்டுமே உதவும், நெருக்கடி ஏற்படுவதை இல்லாது செய்யாது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறினர்.

இப்போதும் கூட அந்தப் புரிதல் இல்லை. எல்லா அரசாங்கங்களும், தற்போதைய அரசாங்கம் உட்பட அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தாமதிப்பதையே நோக்காகக் கொண்டு இயங்குகின்றனவேயன்றி அதை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கோடு அல்ல.

ஜனவரி மற்றும் ஆகஸ்ட் 1961இல், அரசாங்கம் இறுதியாகத் தீவிர நடவடிக்கை எடுத்தது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இறக்குமதி வரிகளில் இன்னும் அதிகரிப்புகள் அடங்கும். பொது வரியில் ஐந்து சதவீத கூடுதல் வரி சேர்க்கப்பட்டது மற்றும் பரந்த அளவிலான பொருட்களுக்குக் கூடுதலாக ஐந்து சதவீத அதிகரிப்புகள் விதிக்கப்பட்டன.

இருப்பினும், மிக முக்கியமாக, உடைகள், பல உணவுப் பொருட்கள் மற்றும் ஏராளமான உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் முதல் முறையாக அளவு இறக்குமதி கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டன. பல ஆடம்பரப் பொருட்கள், குறிப்பாக வாகனங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள், அவற்றின் இறக்குமதிக்கு இனி உரிமங்கள் வழங்கப்படாது என்று

அறிவித்ததன் மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டன. அரசு நிர்வகிக்கும் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் முறைக்கான கட்டமைப்பு நிறுவப்பட்டது. இப்போது முழுமையாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் வர்த்தக அமைப்பை உருவாக்க அரசாங்கம் முயன்றது. இது இலங்கையின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உடனடி ஆண்டுகளின் பொருளாதாரத்தைப் போலவே, 1961இல் இலங்கையில் நிலவிய அமைப்பும் அதற்கு முந்தைய ஒன்றரை தசாப்தத்தின் அத்தியாவசிய பொருளாதாரப் போக்குகளான மக்கள்தொகை அழுத்தம்,

ஏற்றுமதித் தேக்கம், பாரம்பரிய விவசாயத்தின் விரிவாக்கம் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சி, ஐம்பதுகளில் இருந்ததைப் போலவே அறுபதுகளிலும் தொடர்ந்து தெளிவாகத் தெரிந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.