உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்.. திடீரென இறங்கிவந்த ரஷ்யா.. ஒரே ஒரு கண்டிஷன்!! (படங்கள்)
ராணுவத்தாக்குதலை நிறுத்தினால் பேசத்தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லால்ரோவ் கூறியுள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது வியாழக்கிழமையன்று காலையில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அந்நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை கூறியுள்ளது.
தலைநகரை நெருங்கிய ரஷ்ய ராணுவம்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 3 மைல் தொலைவில் ரஷ்ய ராணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகரின் அருகே அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் அருகே ரஷ்ய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் வேதனை
தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உருக்கமான பதிவு வெளியாகியுள்ளது. எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம் என்று கூறியுள்ளார். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம் என்று என்று உக்ரைன் அதிபர் உருக்கமாகப் பேசி வேதனை தெரிவித்துள்ளார்.
போர் பற்றி கருத்து
உலகம் முழுவதும் தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் பற்றிய செய்திகள்தான் பேசப்பட்டு வருகின்றன. போர் தொடர்பாக பல்வேறு நாடுகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அதில் ஒன்றாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, போர் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
ஐநா கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து அந்நாட்டில் பேரணி நடத்தியவர்களை கைது செய்ததற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து 50க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யர்கள் பேரணி நடத்தினர். போர் எதிர்ப்பு பேரணி நடத்தியவர்களை ரஷ்ய அரசு கைது செய்ததை ஐ.நா. கண்டித்துள்ளது.
தாலிபன் கருத்து
இது குறித்து தாலிபான் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் , பொது மக்களின் உயிரிழப்பு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. அமைதியான பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.