;
Athirady Tamil News

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!!

0

குடியரசுத் தலைர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.29ந் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். மனுக்களை திரும்ப பெற அடுத்த மாதம் 2ந் தேதி கடைசி நாள்.

குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் வேட்பாளரை நிறுத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொறுப்பு ஜே.பி.நட்டா மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் உள்பட 22 கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.