;
Athirady Tamil News

அக்னிபாத்துக்கு எதிராக முழு அடைப்பு- உ.பி.யில் 348 ரெயில்கள் ரத்து..!!

0

ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்ற இளைஞர்கள் அதிருப்தி அடைந்தனர். பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரூ.700 கோடி அளவுக்கு பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அப்பாவி இளைஞர்களை தொடர்ந்து போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர். போராட்டம் நடத்த வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள். குறிப்பாக ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் மையத்தினர்தான் இந்த செயலை செய்வதாக தெரிய வந்துள்ளது.

இதனால் போராட்டத்தை தூண்டிய 34 வாட்ஸ் அப் குரூப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால் முக்கிய நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை தொடர்பு கொண்டு உஷார்படுத்தியது. அதன்படி எல்லா மாநிலங்களும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இன்று அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று அனைத்து போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கு 9, 11-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியில் சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 2000 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப் ட்டுள்ளனர். முழு அடைப்பு காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 380 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேப்போல ஆம் ஆத்மி கட்சியினரும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.