;
Athirady Tamil News

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு..!!

0

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கமலா ஹாரிஸ்
இந்த பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக, 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.

6 இந்தியர்கள்
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்து உள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடத்தை பிடித்து இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார். இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர்.

கிரண் மஜூம்தார்-ஷா
பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 72-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்து உள்ளார். இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, கிரண் மஜூம்தார்-ஷா, பால்குனி நாயர் ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.