;
Athirady Tamil News

கர்நாடகத்தில் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் – ராகுல் காந்தி!!

0

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் நடைபெற்ற இளைஞர்கள் புரட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாமல் உள்ள பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட வாக்குறுதியை அறிவித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி பேசியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். கர்நாடகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். கர்நாடக அரசு துறைகளில் காலியாக உள்ள 2½ லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷன் கடைகளில் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். கர்நாடகத்திற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.