ஒடிசா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த சப்-கலெக்டர் ராமசந்திர கிஸ்கு, தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். இந்த தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.