;
Athirady Tamil News

நடிகர் மோகன்லாலை சந்திக்க விரும்பிய 108 வயது மூதாட்டி மரணம்!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா. 108 வயது மூதாட்டியான இவர் அங்குள்ள முதியவர் இல்லத்தில் தங்கியிருந்தார். மூதாட்டி மாதவியம்மா நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் நடித்த திரைப்படம் டி.வி.யில் ஒளிபரப்பினால் ஒரு நிமிடம் கூட விடாமல் ரசித்து பார்ப்பாராம். அந்த அளவுக்கு மோகன்லால் ரசிகையாக இருந்து இருக்கிறார். மேலும் நடிகர் மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது.

அதனை கடந்த 2017-ம் ஆண்டு மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாபி பரம்பி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். அதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதன் மூலம் மூதாட்டி மாதவியம்மா வெளி உலகத்திற்கு தெரிய வந்தார். மேலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் இடம் பிடித்தார். இதனால் அவரை நடிகர் மோகன்லால் நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார்.

அப்போது அவர் மூதாட்டி மாதவியம்மாவை நேரில் சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிக வேலை இருந்ததால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை. உடல் உபாதை காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு மூதாட்டியை அழைத்து செல்ல முடியவில்லை. இந்த நிலையில் மூதாட்டி மாதவியம்மா வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். நடிகர் மோகன்லாலை சந்திக்கும் அவரது கனவு கடைசி வரை நனவாகாமல் சென்று விட்டது. டி.வி.யில் மோகன்லால் படம் ஓடினால் ஒரு நிமிடம் கூட மாற்ற மாட்டார் என்றும், யாரொனும் சேனலை மாற்றினால் அவருக்கு கோபம் வருமென மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தை சேர்ந்த ரசியா பானு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.