;
Athirady Tamil News

பொலிஸாரை கடுமையான வார்த்தைகளால் திட்டிய பெண்ணால் பரபரப்பு

0

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர் அப் பெண்ணும் அவ் இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரும் மதுபோதையில் இருந்ததால் பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண் பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும் அவர் செல்லவில்லை. இதையடுத்து அப் பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னரும் இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார். ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்படி இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.