டிரம்ப் முடிவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகும் அபாயம்! ஐ.நா. எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச எச்ஐவி அறிவிக்கையில், நிதி ஒதுக்கப்படாவிட்டால், எச்ஐவி நோய்க்கு எதிரான போராட்டம், பல ஆண்டுகாலத்துக்கு பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்ஐவியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அந்த நோய்க்கு எதிரான போராட்டம் பல ஆண்டுகாலத்துக்குப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எச்ஐவி நிவாரண அவசரகால திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டதால், ஐக்கிய நாடுகள் அவையின் பல திட்டங்கள் முடக்கப்பட்டு, அதனால், வரும் 2029ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்படுவதோடு, 40 லட்சம் பேர் எச்ஐவியால் மரணமடையும் நிலை ஏற்படும் என்கிறது அந்த தரவு.
வளர்ச்சியடையாத நாடுகளில் எச்ஐவி பாதித்த மக்களுக்கு செய்யப்பட்டு வரும் பல்வேறு உதவிகள் உடனடியாக நிறுத்தப்படுவதன் மூலம், பல ஆண்டுகளுக்கு முன்னோக்கி, நிலைமை சென்றுவிடும் என்கிறது புள்ளி விவரங்கள்.
இதனால், 2030ஆம் ஆண்டு வாக்கில், எச்ஐவி என்பது பொதுமக்களுக்கு அபாயமான நோயாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய நிதியளிக்கும் ஒரு முக்கிய நாடு, திடீரென அதன் நிதியுதவியை நிறுத்தும்போது, அது உலகளவில், எச்ஐவிக்கு எதிரான சிகிச்சை மற்றும் நோய் பாதிப்பை தடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிர்மறையாக மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.