;
Athirady Tamil News

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

0

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸா சிட்டி முழுவதையும் படை பலத்தால் ஆக்கிரமித்து இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் முக்கிய அமைச்சர்கள அளவிலான கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவையால் இன்று(ஆக. 10) ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது.

ஆனால், இத்திட்டத்தால் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று ராணுவம் எச்சரிக்கிறது. இந்தநிலையில், இத்திட்டத்துக்கு பொது வெளியில் எதிர்ப்பலை கடுமையாக வீசுகிறது. காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு ஏற்கெனவே சர்வதேச சமூகத்தால் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் திரண்டு சனிக்கிழமை(ஆக. 9) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் சுமார் 1,00,000 பேர் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில், அங்கு எஞ்சியுள்ள 50 பேரையும் மீட்டுக்கொண்டுவர அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹமாஸால் பல பிணைக்கைதிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது, இஸ்ரேல் – ஹமாஸ் தலைமைக்கு இடையிலான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையால் நடைபெற்ற முன்னேற்றங்களாகும். இந்தநிலையில், அதே பாணியில், சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை மீட்க கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சண்டையை மேலும் தீவிரப்படுத்தாமல் இருப்பதை நெதன்யாகுவிடம் வலியுறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காஸாவில் தொடர் சண்டையில் இதுவரை மரணமடைந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 61,000-ஐ கடந்துவிட்டதாக காஸா சுகாதார அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் மக்களில் ஒருபகுதியினரிடம் இருந்ததை கவனிக்க முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.