லெபனானில் மீண்டும் அதிரடி தாக்குதல் ; 50க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் நிலையிலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 50க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வெளியிட்ட அறிவிப்பில், லெபனானில் இருந்து உருவாகக்கூடிய உடனடி அச்சுறுத்தல்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் எல்லைப் பகுதிகள் மற்றும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட சுரங்க வளாகம் ஒன்று அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு லெபனானில் நடைபெற்ற சோதனைகளில், பொதுமக்கள் வசிக்கும் வீட்டின் குழந்தை படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.