;
Athirady Tamil News

தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை

0

தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை.

தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கும் ஏரியின் கரைகள், சூறாவளிக் காற்றினால் உடைந்து, ஏரி நீர் முழுக்க ஊருக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் சென்ற நிலையில் மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல், தைவானை சூறையாடி வரும் ரகாசா சூறாவளி, தற்போது சீனாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மையம்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தைவானில் கடந்த ஒரு சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரியின் கரைகள் உடைந்திருக்கிறது. அப்போது, ஏரியிலிருந்த தண்ணீர் சுனாமி போல ஊருக்குள் நுழைந்ததாக, அந்தப் பகுதியில் இருக்கும் அஞ்சல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்ததால் உயிர் தப்பிய அஞ்சல் துறை ஊழியர் கூறியுள்ளார்.

வெள்ளம் வடிந்தபிறகு, வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது கார், வீட்டின் வரவேற்பறைக்குள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

60 மில்லியன் டன் தண்ணீர் ஏரியில் இருந்ததாகவும் மீட்புப் பணியில், தைவான் நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், சுமார் 8.700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.