;
Athirady Tamil News

பாகிஸ்தானில் குழந்தைகளின் கண்முன்னே பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், பொதுவெளியில் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கோட்கி மாவட்டத்தின், மிர்புர் மதெலோ பகுதியைச் சேர்ந்த துஃபையில் ரிண்டு எனும் பத்திரிகையாளர், அவரது குழந்தைகளை பள்ளியில் இறக்கி விடுவதற்காக தனது காரில், நேற்று (அக். 8) காலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துஃபையிலின் காரின் மீது கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், துஃபையில் கொல்லப்பட்ட நிலையில், அவரது குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர், அவரது உடலைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி, கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்தினர் கூறுகையில், துஃபையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் மெஹ்ரான் எனும் நாளிதழ் மற்றும் ராயல் நியூஸ் எனும் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததாகவும், மிர்புர் மதெலோ பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகியாகச் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னர் துஃபைல் மீது கொலை முயற்சி நடைபெற்றதால், உள்ளூர் காவல் துறையினரிடம் பாதுகாப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினர் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லைை எனக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.