;
Athirady Tamil News

சமூக சீரழிவுகள் ; மன்னார் தனியார் விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்

0

மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவந்த தனியார் விடுதியொன்றுக்கு இன்றைய தினம் (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையிலான குழுவினர் இந்த விடுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன்போது எவ்வித அனுமதியும் இன்றி குறித்த விடுதி அமைக்கப்பட்டு இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம்
இந்த கட்டடம் தொடர்பான உரிய ஆவணங்களை எதிர்வரும் 14 தினங்களுக்குள் மன்னார் நகர சபையில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த தினத்துக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இக்கட்டடம் “அனுமதியற்ற கட்டடம்” என கருதி நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமையவும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திற்கு அமையவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டடம் இடித்து அகற்றப்படும் என மன்னார் நகர சபை அறிவித்துள்ளது.

அதோடு சிவப்பு அறிவித்தல் விடுதியின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் நகர சபை பிரிவில் பல்வேறு தனியார் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள போதும் இந்த தனியார் விடுதிகள் பல, எவ்வித கண்காணிப்புகளும் இன்றி காணப்படுவதனால், இதில் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, மன்னார் நகர சபை பிரிவில் உள்ள தனியார் விடுதிகள் தொடர்பில் மன்னார் நகர சபை துரித கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.