இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இது தொடர்பில் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு இணைந்து பயணிப்பது தொடர்பிலான பேச்சுக்கு தமிழரசு கட்சியிடமிருந்து எந்த அழைப்பும் கட்சிக்கு வரவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
நேர்காணலொன்றில் மேற்படி விடயம் தொடர்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
நல்லூர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு நாம் ஆட்சியமைத்தோம். அதேபோன்று, வேறு உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இதை மறுக்க முடியாது.
அதேநேரம், எதிர்வரும் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் நாம் ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவதற்கும் எவ்வித தடையும் இல்லை. அத்துடன் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. எனினும் கொள்கை ரீதியாக உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
தமிழரசுக் கட்சி தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல், ஒரு கொள்கையையும் ஒழுக்க நெறிகளையும் முன்னிலைப்படுத்தி ஒரு வலுவான கட்சிகளுக்கிடையிலான கூட்டிணை மேற்கொள்ளவது அவசியம். அவ்வாறு செயற்பட்டால், நாங்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் எந்தத் தடையும் இருக்காது.
எனினும் ஒருமித்து பயணிப்பது தொடர்பிலான பேச்சுக்கு தமிழரசுக் கட்சியிடமிருந்து இது வரை எந்த அழைப்பும் தமிழ் மக்கள் கூட்டணிக்கு விடுக்கப்படவில்லை என்றார்.