மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு!
மும்பை: ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், என்சிபி சட்டப்பேரவை கட்சித் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து, மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, இன்று மதியம் நடந்த கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்சிபி கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் மற்றும் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே உள்ளிட்ட என்சிபி தலைவர்கள், மும்பையில் உள்ள விதான் பவனில் கூடி, சுனேத்ரா பவாரின் பெயரை முன்மொழிந்தனர்.
சுனேத்ரா பவார் என்சிபி சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, என்சிபி தலைவர்கள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, லோக் பவனில் சிறிய அளவில் நடந்த பதவியேற்பு விழாவில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றார். சுனேத்ரா பவாருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்று அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ராஜ்ய சபா உறுப்பினரான 62 வயதான சுனேத்ரா பவார், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டார்.
பிப்ரவரி 7-ம் தேதி புனே ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் என்சிபி-யின் மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரின் பெயரை இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தனர். பவார் குடும்பத்தினரிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இந்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
மகாராஷ்டிர பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடக்க உள்ளதால், நிதித் துறையை தற்காலிகமாக முதல்வர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசியவாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.