;
Athirady Tamil News

எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான அதிரடி தகவல்

0

நாட்டில் ஏற்பட்டுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை சீர்செய்யவும், வருங்காலத்தில் விநியோகத் தடைகளைத் தவிர்க்கவும் வர்த்தக அமைச்சின் ஊடாக அவசர கால பொறிமுறை ஒன்றை லிட்ரோ எரிவாயு நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு விநியோகம் சில நாட்களாக நிறுத்தப்பட்டதால், அதன் நுகர்வோர் லிட்ரோ எரிவாயுவை நோக்கித் திரும்பியதே இந்தத் திடீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளொன்றுக்கு 1,200 மெட்ரிக் தொன்னாக இருந்த தேவை, திடீரென 1,600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்தது. மேலும் சந்தைக்குத் தேவையான எரிவாயு கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த வார இறுதிக்குள் சுமார் 351,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜியோகாஸ் (Geogas) நிறுவனம் மூலம் அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 25,000 மெட்ரிக் தொன் எரிவாயு மாலைத்தீவில் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது அவசர காலங்களில் விரைவாக இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்காக மேலதிகமாக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு ஏற்கனவே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“உண்மையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை, அச்சம் காரணமாக மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்ததே சிக்கலை ஏற்படுத்தியது” என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் பெப்ரவரி 25 முதல் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.